Monday, August 31, 2009

நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன?

பூமிப் பந்தின் மையப்பகுதி (core) இன்னும் சூடாகவும், கொதிக்கும் குழம்பாகவும்தான் உள்ளது. இந்த மையப்பகுதிக்கு மேலாக mantle எனப்படும் பகுதி உள்ளது. அதற்கும் மேலாக crust எனப்படும் மேலோடு உள்ளது. ஆமையில் முதுகில் உள்ள ஓடு மாதிரி இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!



இந்த மேலோடு நல்ல விளாம்பழத்தின் ஓடு மாதிரி ஒப்பமாக ஆக இருக்காது. சில இடங்களில் பிளந்து, அழுத்தம் அற்ற ஓடுகளாக இருக்கும். அங்குதான் பிரச்னையே ஆரம்பமாகிறது.

மேலே உள்ள படத்தில் கறுப்புக் கோடுகள் காணப்படும் இடங்களில்தான் இரண்டு பிளேட்கள் அல்லது ஓட்டாஞ்சில்லுகள் ஒன்றை ஒன்று மோதி உரசுகின்றன. தினம் தினம் இவை நங் நங் என்று மோதிக்கொள்ளா. ஆனால் பலவேறு காரணங்களால் இந்த ஓட்டாஞ்சில்லுகள் ஒன்றை ஒன்றை நசுக்கித் தள்ள முயற்சி செய்யும். அடிப்பகுதியில் பீறிட்டு எழ முயற்சி செய்யும் கொதிக்கும் குழம்பு ஒரு காரணம். இதன் விளைவாக அந்த கறுப்புக் கோட்டுப் பகுதிகளில் எப்போதும் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

அதை நீங்கள் கவனித்தால், ஒரு கோடு அந்தமான், இந்தோனேசியா பக்கமாகப் போகும். அதே கோடு ஜப்பானை உரசிக்கொண்டு போவதையும் பார்க்கலாம். இதே கோடுதான் பங்களாதேசம் வழியாக இமயமலை மேலே ஏறி மீண்டும் குஜராத் வழியாக அரபுக் கடலில் இறங்குவதைப் பார்க்கலாம். இதனால்தான் இந்தப் பகுதிகள் சீஸ்மிக் இயக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகள் எனப்படும். கடந்த இருபது ஆண்டுகளில் குஜராத், மஹாராஷ்டிரா பகுதிகளில் நடந்துள்ள நில நடுக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 2004-ல் இந்தோனேசியா, அந்தமான் நிலநடுக்கமும் அதனால் ஏற்பட்ட சுனாமியும் உங்களுக்கு நன்றாகவே நினைவில் இருக்கும்.


நில நடுக்கம் என்பது எப்படி ஏற்படுகிறது? இரண்டு சில்லுகள் ஒன்றுக்கு ஒன்று பக்கவாட்டில் காகிதம் கிழிவதுபோல நகரலாம். அல்லது, ஒன்று ஒன்றைக் கீழே அழுத்திவிட்டு மேலே போகலாம்.

இந்தக் கிழிசல் அல்லது நகர்தல் நடக்கும் பகுதி எபிசெண்டர் (நடுக்க மையம்) எனப்படும். இந்த நடுக்க மையம் பூமியின் மேல்பரப்புக்கு வெகு அருகில் இருந்தால், அதிர்ச்சி பலமானதாக இருக்கும். ஆழத்தில் இருந்தால், அதிர்ச்சி அவ்வளவாக இருக்காது. நடுக்க மையம் கடலுக்கு அடியில் இருந்து, அதனால் ஒரு சில்லு இன்னொரு சில்லை அழுத்திவிட்டு மேலே எழுந்தால் நிகழ்வதுதான் சுனாமி. பல கிலோமீட்டர் நீளத்துக்கு, ஒரு சில்லு ஒரு மீட்டர் உயரத்துக்கு எழுகிறது என்றால், எந்த அளவுக்கு கடல் நீரை நகர்த்தும் என்று பாருங்கள். அத்தனை கடல் நீரும் உயர எழும்பி கரையை நோக்கிப் பாயும்போதுதான் ஆழிப் பேரலை என்ற நிகழ்வு நடைபெறும்.

நிலம் அதிரும்போது அதன் அதிர்ச்சியைக் கணக்கிட ரிக்டர் அளவுகோல் என்பதைப் பயன்படுத்துவார்கள். நிலம் அதிரும் என்று நாம் சொல்லும்போதே ஒருவித அலைகள் பரவுவதாக நம் சொல்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும். இரண்டு சில்லுகள் ஒன்றோடு ஒன்று மோதினால், மோதிய வேகத்தில் இரண்டும் எதிர்த் திசையில் பின்வாங்கும். பின் இரண்டும் மீண்டும் ஒன்றை ஒன்று நெருங்கு மோதும். இப்படி மோதிக்கொண்டே இருக்கும் இரு சில்லுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மோதல் வீச்சில் குறைந்து (amplitude attenuation) அமைதியாகும். அப்படி அவை மீண்டும் மீண்டும் மோதும்போது நில அதிர்வலைகள் உருவாகும் அல்லவா? அவற்றை நுட்பமான கருவிகள் கொண்டு அளக்கலாம். அந்தக் கருவியில் பதிவாகும் அதிர்வலைகளின் வீச்சைக் கொண்டு, நில நடுக்கம் எவ்வளவு மோசமானது என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த ரிக்டர் அளவு என்பது லாகரிதமிக் அளவுகோலில் வருவது. அதாவது ரிக்டர் அளவு 6 என்பது ரிக்டர் அளவு 5-ஐப்போல பத்து மடங்கு பெரியது. ரிக்டர் அளவு 7 என்பது ரிக்டர் அளவு 6-ஐப்போல பத்து மடங்கு பெரியது; 5-ஐப்போல 100 மடங்கு பெரியது. மாபெரும் சுனாமி 2004 நேரத்தில் நடந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 9-ஐத் தாண்டியது. எனவே மிகக் கோரமானது. திங்கள் அன்று நடந்த நிலநடுக்கம் சுமார் 6.5 என்ற ரிக்டர் அளவு. அதாவது 2004 நில நடுக்கத்தைப் போல சுமாராக ஆயிரத்தில் ஒரு பங்குதான். எனவேதான் உயிர்ச்சேதம், பொருள் சேதம் இன்றித் தப்பித்துள்ளோம்.

நிலநடுக்கம் என்பதைத் தடுக்கமுடியாது. எப்போது வரும் என்பதைக் கணிப்பதும் கடினம். நாம் நிலநடுக்கப் பகுதியில் எங்கு இருக்கிறோம் என்பதைப் பொருத்து, சரியான கட்டுமானங்களைக் கட்டி, சுனாமியிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொள்ளவேண்டும். அவ்வளவுதான் மனிதனால் செய்யமுடிந்தது.

படங்கள் மற்றும் தகவல்கள் : விக்கிமீடியா,அறிவியல்.info, Moorland School Earth Sciences

அமெரிக்காவின் நவீன உளவுச் செய்கோள்


அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட நவீன உளவு செய்கோள் ஒன்று 2011ம் ஆண்டு விண்ணுக்கு ஏவவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேசிக் (BASIC) என பெயரிடப்பட்ட இந்த செய்கோள் ஏற்கனவே அமெரிக்காவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் பல செய்கோள்களை விட மிகவும் நவீன தொழில் நுட்பங்களைக் கொண்ட அடுத்த தலைமுறை செய்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பன்னாட்டு படைகளில் வலிமை, படை நடவடிக்கைகள் என பல உளவுத் தகவல்களை மிகவும் துல்லியமாக படம் பிடித்து சரியான ஆழ்கூறைக் கணிப்பிடக்கூடியளவுக்கு இச் செய்கோள் திறன்கொண்டது.

இதனைத் தயாரிக்க 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகின்றது. இதனைத் தயாரிப்பதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பென்டகன் 2005ம் ஆண்டு இத் தயாரிப்புக்கு மறுப்புத் தெரிவித்த போதும் தற்போது இதற்கு அனுமதி அளித்துள்ளது.

எனினும் இச் செய்கோள் தயாரிப்புக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாவதை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதுகாப்பு வல்லுநர்களும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்

Thursday, August 27, 2009

வால்நட்சத்திரத்தில் உயிரின மூலக்கூறு கண்டுபிடிப்பு


அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் வால்நட்சத்திரம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரியை ஆராய்ந்ததில் அதில் கிளைசின் (glycine) எனும் அமினோ அமிலம் இருந்ததை இனங்கண்டுள்ளனர்.

அமினோ அமிலங்கள் உயிரினங்களை ஆக்கியுள்ள பெரிய இரசாயன மூலக்கூறுகளில் புரத மூலக் கூறுகளை ஆக்குவதில் பங்களிக்கும் ஒரு வகை எளிமையான உயிர் இரசாயனக் கூறுகள் ஆகும்.

மனிதன் போன்ற உயிரினங்களில் மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. அதில் கிளைசினும் அடங்குகிறது.

வால்நட்சத்திரத்தில் காணப்பட்ட கிளைசினின் கட்டமைப்பில் உள்ள காபன் மூலக்கூறு பூமியில் உள்ள கிளைசின் கொண்டுள்ள காபனை விட கனதியானது என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விண்கற்கலில் ஏலவே இவ்வாறான உயிர் இரசாயன மூலக்கூறுகள் முன்னரும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை இங்கு நினைவு கூறத்தக்கது.

பூமியில் உயிரின் உற்பத்தி என்பது பூமியோடு வால்நட்சத்திரங்களின் மோதலால் கூட ஏற்பட்டிருக்கலாம் என்பது போன்ற விஞ்ஞான கோட்பாடுகள் முன்னைய காலங்களில் வெளி வந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்தக் கண்டுபிடிப்பு தற்போது இருக்கும் பூமியில் நிகழ்ந்த இரசாயன கூர்ப்பின் மூலமான உயிரின் உற்பத்தியை நிராகரிக்கப் போதுமானது அல்ல.. என்றே கணிக்கப்படுகிறது. அதற்கு இன்னும் நிறைய ஆதாரங்களை விஞ்ஞான உலகம் திரட்ட வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.


நன்றி : lankasritechnology

Wednesday, August 19, 2009

பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்! பெண்களின் இதயத்தை பாதிக்கும் நெடுந்தூக்கம்!


இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.

தெற்கு கரோலினா பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்கள், நடுத்தர வயது பெண்களின் தூக்கத்துக்கும், இதய கோளாறுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

50 முதல் 79 வயது வரையிலான மொத்தம் 93,175 பெண்களும், அவர்களது தூக்க நேரங்களும் ஏழரை ஆண்டுகாலம் கண்காணிக்கப்பட்டது.

இந்தப் பெண்களில் 1,166 பேருக்கு மிகவும் பொதுவான வகையைச் சேர்ந்த இதயக் கோளாறான 'இஸ்கெமிக் ஸ்ட்ரோக்'கை அனுபவித்திருப்பது ஆய்வில் தெரியவந்தது.

ஆய்வின் முடிவில் சராசரியாக 7மணி நேரம் தூங்குவோருடன் ஒப்பிடுகையில், 6 மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரம், 8மணிநேரம் மற்றும் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட மணிநேரம் தூங்குவோருக்கு முறையே 14சதவிகிதம், 24சதவிகிதம் மற்றும் 70 சதவிகிதம் அளவில் இதயக் கோளாறு வருவதற்கான அபாயம் உண்டு என்பது கண்டறியப்பட்டது.

எனவே, பெண்கள் 9 மற்றும் அதற்கும் அதிகமான மணிநேரங்கள் தூங்குவதைத் தவிர்த்து, சராசரியாக 7 மணி நேரம் தூங்குவதே சாலச் சிறந்தது என்று மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நன்றி : லங்காஸ்ரீ இணையம்

Monday, August 17, 2009

முழுவதும் வைரமாக மாறி வரும் நட்சத்திரம்


முழுவதும் வைரமாக மாறி வரும் ஒளி வீசும் நட்சத்திரத்தை வான மண்டலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நட்சத்திரம் விஞ்ஞானிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஹார்வர்டுஸ்மித்சோனியன் விண்வெளி அறிவியல் ஆய்வு மையத்தை விஞ்ஞானி திராவிஸ் மெட்கப் என்பவர் தலைமையில் ஒரு குழு இந்த நட்சத்திரம் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகின்றது.

பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இந்த நட்சத்திரம் மின்னுகின்றது. ஒரு காலத்தில் சூரியன் போல் அனல் கக்கி ஒளி வீசிய நட்சத்திரம் பிற்காலத்தில் முற்றிலும் எரிந்து அதில் இருந்த கார்பன் இறுகி முழுவதுமாக வைரமாக மாறிவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.நான்காயிரம் கி.மீ சுற்றளவு கொண்டதாக விளங்குவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வைரத்தை carat என்ற அளவில் தான் குறிப்பிடுவார்கள். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 546 Carat அளவில் ஒரு வைரம் வெட்டி எடுக்கப்பட்டது. உலகளவில் அது தான் பெரிய வைரம். ஆனால் வானில் உள்ள நட்சத்திரம் பல கோடி Carat அளவில் உள்ளதாக வானியல் நிபுனர்கள் தெரிவிக்கின்றனர்.

முன் இவ் நட்சத்திரத்துக்கு "BPM37093" என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது இப்பொழுது வைர நட்சத்திரத்திற்கு Lucy என்று விஞ்ஞானிகள் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.வைர நட்சத்திரம் நன்கு ஒளிவீசியதால் 40 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் கவனத்தை ஈர்த்தது.

அப்பொழுது நட்சத்திரத்தின் உட்பகுதி பளிங்காக மாறி இருக்கும் என கருதிய விஞ்ஞானிகள், அது முழுவதுமாக வைரமாக இருக்கிறது என்பதனை தற்பொழுது கண்டுபிடித்துள்ளனர். சூரியனும் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் எரிந்து வெள்ளை நட்சத்திரமாக மாறிவிடும்.அதன் பின்னர் 200 கோடி ஆண்டுகளுக்கு பிறகு சூரியனும் ஒரு வைர நட்சத்திரமாக மாறிவிடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Sunday, August 16, 2009

பூவிலும் பாலுண்டு

மூன்றாம் நூற்றாண்டிலேயே தாவரங்களில் ஆண்பால் - பெண்பால் என
இரு வகைகள் இருப்பதை மனிதன் கொஞ்சம் அறிந்துவத்திருக்கிறான் என
ஆதராங்கள் இருந்தாலும்,

ஜெர்மனியைச் சேர்ந்த கேமராரியஸ்தான் இதைச் சோதனைகள் மூலம்
உலகுக்கு அழுத்தமாக நிரூபித்தவர்.

நம் நாட்டிலும் நம் மூதாதையர்கள் இயற்கையைக் கவனித்து
இத்தாவர பாலின விதியை என்றோ நிச்சயமாய் அறிந்திருப்பார்கள்.
கார்த்திகை தீபம் அன்று, கவண் நடுவே துணியில் வைத்து
பூப்பூவாய் பொறி பறக்க எரிக்கும் கரி தருவது - பனைமரத்தின் ஆண் பூ என
சொல்லக் கேட்டிருக்கிறேன்.

செடிகள் - மலர்களில் ஆண் -பெண் பால் பேதம் பற்றி
விவரமானக் குறிப்பு பண்டைய இலக்கியங்கள், ஏடுகளில் இருந்தால்
அறிந்தவர்கள் கூறுங்கள். அறியக் காத்திருக்கிறேன்.

ஒரு மரம் அல்லது செடி காய்க்க அதன் மலரில் ''போலன்'' எனப்படும் மகரந்தம்
சேரவேண்டும் என சோதனைகள் மூலம் நிறுவியவர் கேமராரியஸ்.

ஆமணக்குப் பூவின் ''ஸ்டேமனையும்'', சோளப்பூவின் ''ஸ்டிக்மா''வையும்
நீக்கிய அவர், அவை ''விதை'' உருவாகமல் மலடாயிருப்பதை நிரூபித்தார்.

http://www.urbanext.uiuc.edu/gpe/case4/c4facts1a.html

ஸ்பினாச், பாலக் என அழைக்கப்படும் கீரைச்செடிகள் ஆண், பெண் என
இரு வகையில் இருப்பதையும், அவற்றைப் பிரித்து தூரத்தில் வளர்த்தால்
இதே போல் வாரிசு இல்லாமல் அழிவதையும் செய்துகாட்டினார்.

மிருகங்கள் போலவே , தாவரங்களும் ''பாலினச் சேர்க்கை''யாலேயே பல்கிப் பெருகுகின்றன
என தம் முடிவை ஆணித்தரமாக 1694 -ல் வெளியிட்டார்.

அறிவியல் உலகில் அடிக்கடி நடக்கும் விசேஷம் ஒன்றுண்டு. எங்கோ ஒருவர் தனியாய் பாடுபட்டு
ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவார். ஏறக்குறைய அதே காலகட்டத்தில் கொஞ்சம் பிந்தி
இன்னொருவர் உலகின் இன்னொரு மூலையில் அதே முடிவை எட்டுவார்.

இங்கும் பூக்களின் பால் இனம் பற்றி 1696-ல் இலண்டனில் நெஹமய்யா க்ரூ என்பவரும்
ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை அதே முடிவுகளுடன் சமர்ப்பித்தார்.

கேமராரியஸ் கண்டுபிடிப்பின் பலன்கள் விரைவில் தெரிய ஆரம்பித்தன.
ஒரே ஸ்பீஷிஸ் (இனம்) பூக்களின் ஆண் -பெண் சேர்க்கை இயற்கை!
மனிதன் செயற்கையாய் வேறு வேறு இனப் பூக்களின் ஆண் -பெண்ணைச் சேர்த்தான்.
விநோத, வேடிக்கை வண்ணங்களில் புதிய பூக்கள் தோன்றின.
அதே போல் அபூர்வ இனப் பூக்களை விரும்பும் அளவுக்கு சேர்த்து பெருக்க வைத்தான்.
முன்னர் அத்திப்பூ என்பன அதன்பின் சந்தைப்பூ ஆயின!

பின்னர் நுண்ணோக்கியால், ஆண் மகரந்தம் எப்படி ஒரு குழாய் முளைத்து (போலன் டியூப்)
பெண் மகர்ந்த ''முட்டை''யை சிறு துவாரம் போட்டு துளைத்து கருவாய் உருவாகிறது
என்ற தேவ ரகசியமும் அறிந்தான்..

உச்சமாய் கிரகர் மெண்டல் என்ற துறவி.. அறிவியல் துறக்காத துறவி...
அவரைப்பூக்களின் மகரந்தச் சேர்க்கையை அளவானக் கட்டுப்பாட்டில் நிகழ்த்தி
மரபின் விதிகளையே இம்மாநிலம் அறியத் தந்தான்!


பிறப்பின் மரபுச் சிக்கல் அறிந்து சொன்னவர் - ஒரு துறவி!
அறிவியலில் எனக்கு மிகவும் பிடித்த முரண் இது!!

நன்றி : தமிழ்மன்றம்

Saturday, August 15, 2009

எங்கையோ சுட்டவை-3


நீ
முத்தமிடுவதைவிட
முத்தமிடும்போது நீ
மிகையழகு
அதையும்
சில வேளைகளில்
ரசிக்காமல் பண்ணிவிடுகிறாய்
கண்களில் முத்தமிட்டு













உன்னைக்
காதலிக்கவும்
வேறு யாரையும்
காதலிக்காமலும்
இருக்க கற்றுத் தந்த
என் காதல் ஆசிரியை நீ













குயில் பாடுவதைவிட
அதை ரசிக்க நீ படாது
பாடு படுவதுதான்
என்னைரசிக்க வைக்கிறது












நாய்க்கு நீ பயந்து
என்னைக் கட்டிப்பிடிப்பதால்தான்
எனக்கு நாய் நன்றி
உள்ள மிருகம்












உன்னைத் தேடி
கிறுக்கியகிறுக்கல்கள் எல்லாம் உன்னைக்காட்டிக்
கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன
அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்


நன்றி : யாழ் அகத்தியன்

Friday, August 14, 2009

விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்?

இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார்.
பல நாட்டு நூல்களிலும் விமானங்கள் ஏவுகணைகள் பற்றிய செய்திகள் காணப்பட்டாலும் கூட தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் மிகப்பழைய காலம் முதலே இவை பற்றி குறிப்புக்கள் காணப்படுவதோடு அவற்றின் அமைப்பு முறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் நம் மூதாதையர்களான இந்துக்களா? என்று நமக்கு எண்ணத் தோன்றுகின்து

ரிக்வேதம். இராமாயணம். மகாபாரதம். சமரங்கன சூத்திரா. வைமானிக சாஸ்திரம் எனப்பழைய நூல்களில் விமானம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. இவை வெறும் கற்பனையில் உருவானவை என்றோ மூடநம்பிக்கையை விதைக்கின்ற புராண இதிகாசங்கள் என்றோ நம்மால் அப்படியே ஒதுக்கி விடவும் முடியவில்லை.

ரிக் வேதமானது நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கருதப்படுகிறது. இதில் போர்க்கடவுளான இந்திரன் விமானரதத்தில் பறந்து வந்து அசுரர்கள் மீது போர் நடத்தியதாகவும் மயன் இவ் வானவூர்தியை ஓட்டியதாகவும் தகவல்கள் உள்ளன அத்துடன் வருணன் போன்ற தேவர்கள் மிகச்சிறந்த வானவ+ர்தியில் வானவெளியில் சென்றதாகவும் புஷன் என்பவன் மிகச்சிறந்த ஓட்டியாக திகழ்ந்தான். என்ற குறிப்பும் காணப்படுகிறது. இது கற்பனையில் உருவானது எனக்கூறினாலும் வானில் பறப்பது சாத்தியமே எனக்கூறியதிலிருந்து விமானத்தின் முன்னோடிகளாக எமது இந்துக்கள் திகழ்ந்தனர் எனக்கருதவும் இடமுண்டு.

அடுத்து இராமாயண காலத்தில் இராவணன் என்னும் தமிழ் மன்னன் புஷ்பக விமானத்தில் பறந்ததாகவும். மயன் என்பவனின் கைவண்ணத்தினால் இது உருவாகியதாகவும். குபேரன் என்னும் மன்னனுக்கே இப்புஷ்பக விமானம் சொந்தமானது எனவும் இதை இராவணன் கைப்பற்றி அதில் அவன் விண்வெளி முதல் கொண்டு பல உலகங்களையும் சுற்றி வந்தான் எனவும் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது வால்மீகியின் கற்பனையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இவற்றை ஆதாரப்படுத்துவது போல் இலங்கையிலே நுவரேலியா என்னும் மாவட்டத்திலே இராவணன் என்னும் மாமன்னன் இராமரின் மனைவியான சீதையை சிறை வைத்ததாகக் கூறப்படும் சீதாஎலிய என்று ஒரு இடம் உண்டு. இந்த இடத்திலிருந்து உலகத்தின் முடிவு (World End ) என்று அழைக்கப்படும் இடம் நோக்கி கிட்டத்தட்ட 8 மைல் தூரம் வரை சென்றால் “ குவான் பொல (Guvaan Pola) என்ற இடத்தை அடையலாம் இச் சிங்களப் பெயரின் தமிழ் வடிவம் விமானச்சந்தை என்பதே இந்த இடத்தில் விமானத்தின் இரு ஓடுபாதைகள் இருந்ததற்கான அடையாளங்களாக மலையில் நீண்ட மலைச் சமவெளிகளைக் கொண்டஇரு பிரதேசங்கள் உண்டு. இது இராவணன் பயன் படுத்தியதாகக் கூறப்படும் புஷ்பக விமானத்தின் ஓடுபாதை என்பது பலரது கூற்று. இதை உறுதிப் படுத்துவது போல் 1971ஆம் அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ஒருவர் இராவணன் என்றதொரு தமிழ் மன்னன் வானவூர்தியுடன் சிறப்பான ஆட்சி செய்தான். என்பதனை அறிந்து இப்பிரதேசத்திற்கு வந்து இப்பிரதேசத்தினை ஆராய்ந்து இது இராமாயணத்தில் வரும் இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் ஓடுபாதையாக முன்னர் இருந்திருக்கலாம் எனவும். அதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. என்று தனது நூலில் கூறியுள்ளார். இதுவும் அவரின் கற்பனை என்று கூடக் கூறலாம்.

இக்கருத்துக் கூட கற்பனை என்று மட்டுமே நம்மால் எண்ண முடிகின்றது. உன்மையில் விஞ்ஞானக் கருவிகள் இருக்க முடியாத அந்தக்காலத்தில் ஆகாயத்தில் விமானங்கள் மூலம் பறப்பது பற்றியும் பல மைல்கள் ஏவுகணைகள் போல நெடுந்தூரம் தாண்டிச் சென்று தாக்கக் கூடிய அஸ்திரங்கள் பற்றியும் எப்படி அவர்களால் கற்பனை கூடச் செய்ய முடிந்தது. என்று நாம் சற்று நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாகவும் எம் இந்துக்களான பழந்தமிழர் விமானத்தின் முன்னோடிகள் தானா ஆராயவும் தலைப்பட்டவர்களாக உள்ளோம். அத்துடன் மயனால் எழுதப்பட்ட மயன் மதம் என்னும் நூலிலும் அதன் விளக்க உரை காட்டும் நூலிலும் வானவூர்தியைப் பற்றியும் அவைகளின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமரங்கன சூத்திரா 11ம் நூற்றாண்டில் “இராமச்சந்திர தீட்சிதர் என்பவரால் எழுதப்பட்டது என்பார்கள் இதில் வானவெளிக்கப்பல்கள் எப்படிச் செலுத்தப்பட்டன. அதன் அமைப்பு முறை. என்பன பற்றி விரிவாகக்கூறுகின்றன. அதில் மூன்று விதங்களில் வான்வெளிக் கப்பல்களைச் செலுத்த முடியும் என்கிறது. 1. கீழிலிருந்து(பூமியிலிருந்து) விண்ணை நோக்கிப் பறப்பது.

2. வானவெளியில் பல திசைகளில் பறப்பது.

3. மேலிருந்து (விண்ணிலிருந்து) கீழே இறங்குவது. (பூமி நோக்கி வருதல்)

சில வான்வெளிக் கப்பல்களில் சூரியமண்டலம். மற்றும் நட்சத்திரங்கள் வரை சென்றுவர முடியும் என்றும் இவை மிக வேகமாகச் செல்லக்கூடியவை. அத்துடன் அவை பூமியிலிருந்து பறக்கும் போது அதன் ஒலி புவியில் உள்ளவர்களுக்கு மிக மெல்லிதாகவே கேட்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் வான்வெளி விமானங்கள் விண்வெளியில் ஏவப்படும் போர்க்கருவிகள் பற்றியெல்லாம் கூறப்பட்டாலும் கூட இதில் சில விடயங்கள் இருந்திருக்கலாம் என்று கருதலாமே தவிர. அவை இருந்தன. என்று கூறுவதற்கு புராண இதிகாசங்கள் ஆதாரமாகிவிடாது. அத்துடன் இதில் வரும் பாத்திரங்கள் கடவுளாகவும் அவதாரங்களாகவும் இருப்பதால் அவர்களால் மனிதனால் நடாத்தமுடியாத அற்புதங்களை நிகழ்த்தினார்கள் எனச்சொல்லலாம். நம்முன்னோர்கள் கர்ன பரம்பரையாகச் சொல்லப்பட்ட கதைகளை காவியமாக வடித்தனர் இருந்த போதும் அந்தக்காவியங்களில் கற்பனை இடம் பெறுவது தவிர்க்க முடியாததே. இருந்தபோதும் அந்தக்கால மனிதருக்கு விமானம் பற்றி தெளிவான சிந்தனை வெளிப்பட்டது வியப்பானதே.

அடுத்து வைமானிகா சாஸ்திரம் எனும் நூல் “பரத்துவாஜரால் எழுதப்பட்டு இப்போதுள்ள சமஸ்கிருத வடிவில் சுப்புராய சாஸ்திரியால் உருவாக்கப்பட்டது. எனினும் இதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்கள் இதனை “பறக்கும் சாஸ்திரம் பற்றிய விஞ்ஞானம் என்றே குறிப்பிட்டுள்ளனர். இதில் உள்ள கருத்துக்கள் பழங்கால விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டு நவீனகால விஞ்ஞான அறிவையும் மிஞ்சி நிற்கின்றது.
விமானம் என்றால் என்ன என வைமானிகா சாஸ்திரம் இலக்கணம் கூறும் போது ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு காற்று வழியாக பறந்து செல்லும் கருவியே விமானம் என்கிறது. விமானத்தில் 32 சூட்சுமங்கள் இருப்பதாகவும் இவை அனைத்தும் விமானிக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறியதுடன் விமான அமைப்பு. விமானம் பறப்பது (ஏறுவது). இறக்கும் போது விமானத்தின் கட்டப்பாடு. எனும் 3 தலைப்புக்களில் இந்த 32 சூட்சுமங்களும் அடக்குகின்றன.

அத்துடன் இதில் (வைமானிகா சாஸ்திரம்) விமான ஓட்டத்தைப் பதிவு செய்யும் கருவி. விமானத்திலிருந்து எதிரிகளைத் தாக்கும் ஏவுகணைகள். விஷவாயுக்கள். இறக்கைகளை நீட்டுவதும் மடக்குவதும். பருவ நிலைகளை உணர்த்தும் அமைப்பு சூரிய சக்தியைப் பயன்படுத்துதல். விமான ஓட்டி அணிய வேண்டிய உடை. உணவுப்பழக்க வழக்கம். விமானம் செய்யப் பயன்படுத்தப்படும் உலோகம். என்பன பற்றியெல்லாம் விரிவாகக் கூறுகின்றது.

குறிப்பாக விமானம் செய்யப்பயன்படும் உலோகம் பற்றிக் கூறும் போது வெப்பத்தைக் கிரகித்துக் கொள்ளும் உலோகமே உகந்தது எனக் கூறுகிறது. அத்துடன் விமானம் செய்யப் பயன்படும் உலோகங்களின் வகைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் விமானத்தில் ஏழுவகையான கண்ணாடிகளும் லென்சுகளும் பொருத்தப்பட வேண்டும் இந்தலென்சுகள் ஆயுதங்களைப் பிரயோகிக்க உதவியதாகவும் இந்த வைமானிகா சாஸ்திரம் கூறுகின்றது.

அத்துடன் எதிரி விமானியின் கண்களை இருட்டாக்க லென்சுகளைப் பயன்படுத்த வேண்டும். என்றும் சூரிய ஒளியில் மின்சத்தியைப்பெற்று அதன் மூலம் எதிரி விமானிகளை அழிக்கும் முறைகளையும் கூறிப்பிட்டுள்ளது.

இது நவீன விமானத்தின் லேசர் தொழில் நுட்பத்தையும் விஞ்சி நிற்பதிலிருந்து விமானத்தின் முன்னோடிகள் எம் மூதாதையர்களா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.

மேலும் ஏழு மோட்டார்கள் மூலம் இவ்விமானங்களை இயக்க சக்தி கிடைப்பதாகவும். சூரியசக்தி. இரசாயண சக்தி. மின்சக்தி. என்பவற்றின் மூலம் விமானம் முன்னோக்கி செலுத்தப்பட்டு வெற்றிகரமாக பறப்புக்களை மேற்கொண்டதாகவும் இதில் பெரும்பாலும் சூரியஒளியே பயன்படுத்தப்பட்டது. எனும் தகவலும் (வைமானிகா சாஸ்திரத்தில்) உள்ளது.

இந்தத்தகவல் நமக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது. அல்லவா!. அத்துடன் இதில் ருக்ம, சுந்தர, திரிபுர, சகுண, என நான்கு வகையான விமானவகைகள் இருந்ததாகக் கூறுகின்றது. அதில் ருக்மவிமானம், சுந்தவிமானம், ஆகியன சந்திர மண்டலத்திற்குச் சென்ற அப்போலோ விண்கலத்தை போன்ற அமைப்புடன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிபுர விமானம் தரையிலும் நீரிலும் செல்லக்கூடியது. இதன் வேகம் குறைவானது. என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சகுன விமானமானது நம்முடைய நவீன விமானத்திற்கும் ராக்கெட்டுக்கும் இடைப்பட்ட அமைப்பைக்கொண்டது. இந்த விமானம் மூலம் எந்தக் கிரகத்திற்கும் சென்றுவர முடியும். என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இது வெறும் கற்பனையில் உருவான நூல் (வைமானிகா சாஸ்திரம்) என்று கூறமுடியாதுள்ளது. எனினும் அவற்றை கற்பனை எனக் கூறினாலும் அதில் உள்ள விமானம் பற்றி வியத்தகு நவீன தொழில் நுணுக்கங்கள் பற்றி பழங்கால மனிதன் ஒருவனுக்குத் தெரிந்திருந்தது வியப்பானதே.

சங்க இலக்கியமான புறநானூறு மணிமேகலை, சீவகசிந்தாமணி, பெருங்கதை, போன்றவற்றிலும் வானவூர்தி பற்றிய கருத்து காணப்படுகிறது. பெருங்கதை என்னும் பழந்தமிழ்க் காவியத்தில் வானவூர்தி வடிவமும் அதை இயக்கும் விதமும் விவரிக்கப்பட்டுள்ளன.

சீவகசிந்தாமணியில் வரும் மயிற்பொறியின் (மயில் போன்ற பறக்கும் பொருள்) செய்தியானது நமக்கு வியப்பினை ஏற்படுத்துகிறது.

அதன் பொறியினை வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக திருகுவதன் மூலம் அம்மயிற் பொறி வானமேகங்களிடையே பறக்கவோ காண்பவர் மயிர்சிலிர்க்கும் வகையில் தரையில் இறங்கச்செய்யவோ முடியும் என்கின்றது அந்நூல்.

இராமாயணத்தில் இராவணன் செலுத்திய புட்பக விமானம் சீவகசிந்தாமணியில் விவரித்த மயிற்பொறி விமானத்தை விட எல்லாவகையிலும் மேம்பட்டது என்கின்றனர் சான்றோர். மணிமேகலையிலும் கூட வான்வழிப் பயணங்கள் பற்றிச்சித்தரிக்கப்பட்டுள்ளன.

சிலப்பதிகாரத்திலும் வானவூர்தி பற்றிய செய்திகள் காணப்படுகின்றது. சங்கஇலக்கியமான புறநானூற்றில் வலவன் ஏவா வான ஊர்தி (புறம் -27.

என்ற வரி விமானத்தை ஓட்டுபவர் இல்லா வானவூர்தியைக் கொண்டிருந்தான். என்கின்ற கருத்து நம் தலையைச் சுற்ற வைக்கின்றது. விமான ஓட்டியை வலவன் எனஅழைக்கின்றது புறநானூறு. இது நிச்சயமாக கற்பனையில் உருவான கதை என கூற முடியாது.

புறநானூற்றுத்தமிழன் உண்மையில் நமக்கு முன்னோடிகளே! அந்த முன்னோட்டத்தை இன்றைய தமிழராகிய நாம் உணரவில்லை மாறாக தமிழை மறக்கவே முனைவது கவலையையே தருகின்றது. ஒரு காலத்தில் கற்பனையாக இருப்பது பிறிதொரு காலத்தில் நிஜமாகி விடுவதுண்டு உதாரணமாக ஜூல்வொர்னி என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உலகைச்சுற்றிவர எண்பது நாட்கள்.

எனும் கற்பனை நூலில் நீருக்கடியில் செல்லும் கப்பல்கள். சந்திர மண்டலத்திற்கு வான்வெளிக்கப்பல்களின் மூலம் பயணம் செய்வது பற்றியெல்லாம் எழுதியிருந்தார் ஆங்கிலத்தில் விமானப் பயணம் பற்றி எழுந்த நூல்களில் இதுவே முக்கியமானதாகும்.

பொதுவாக ஆங்கிலத்தில் எழுந்த நூல்கள் எல்லாம் பிரித்தானியாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் பின்னரே எழுந்தது எனலாம் விண்ணியல் பற்றிய வரலாற்றை இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதஇனம் அறிந்திருந்தது. ஆனால் இது எங்கே அறிமுகமானது எனத்தெரியவில்லை. தமிழில் மட்டுமல்ல வேறு மொழிகளிலும் இவைபற்றிய அறிவுகாணப்பட்டது.

1232 களில் சீனத்தார்த்தாரி இனத்தவர்கள் ராக்கட்கள் பயன்படுத்தியதற்கான வரலாற்றுச்சான்றாக மொங்கோலிய அரசனான ஜெங்கிஸ்கானின் மகனான ஒக்டாயின் தலமையின்கீழ் மொங்கோலியர்கள் சீனத் தார்த்தாரியர்களின் காய்பெங்பூ நகரைத்தாக்கியபோது சீனர்கள் தமது நகரைக்காக்க ராக்கட்களை பயன்படுத்தினர். என்பதிலிருந்து அவர்கள் வானியல் பற்றி அறிந்திருந்தனர். என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

ஆனால் இது பிற்பட்ட காலத்திலேயே இதை இவர்கள் அறிந்திருந்தனர் எனவே விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் நிச்சயமாக இந்துக்களாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் கி.பி.1280ல் ஹசன் அல்ரமா என்பவரால் அரபு மொழியில் எழுதப்பட்ட கையெழுத்துப்பிரதி ஒன்றில் ராக்கட்களை அமைப்பது விண்வெளியில் பயணத்தை மேற்கொள்வது அவற்றை எப்படி அமைப்பது வெடிமருந்து தயாரிப்பது என்பதுபற்றிய குறிப்புக்கள் காணப்படுகிறது. ஆங்கிலேயருக்கெதிராக 1780இல் இளவரசன் ஹைதர்அலிகான் ராக்கட் தாக்குதல் செய்து ஆங்கிலேயரை வியப்பில் ஆழ்தினான் என்றுஒரு குறிப்பும் உண்டு.

இவையும் பிற்பட்ட காலத்தில் எழுந்தவைகளே எனலாம். அத்துடன் கிறிஸ்துவின் காலத்திலும் வானதேவதைகள் பற்றிக் குறிப்பிட்டாலும் அதற்கு முன்னரே இந்து இலக்கியங்களில் விமானம் பற்றிய சிந்தனை காணப்படுகிறது.

சீன. மற்றும் இலத்தீன் மொழிகளில் விமானம் பற்றிய செய்திகள் அந்நூல்களில் காணப்பட்டாலும் அவை எல்லாம் பிற்காலத்தில் எழுந்தவைகளே! எனலாம் ஆகவே இந்துதர்மத்தைக் கூறுகின்ற புராணங்கள். இதிகாசங்கள் காப்பியங்கள். ஆகியவற்றில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே விமானம் பற்றிய சிந்தனை இருந்திருக்கின்றது.

இதிலிருந்து விமானத்தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் இந்துக்களாகவே இருந்திருக்கின்றார்கள் என்ற கருத்தே முதன்மை பெறுகின்றது. இவை கற்பனைக்கதை எனக் கூறினாலும் இதிலுள்ள விமானத் தொழில்நுட்பம் வியப்புக்குரியது.

Thursday, August 13, 2009

'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்'



'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு.

அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், 'இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே' என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.

சிரிப்பினால் உடலுக்கு உண்டாகும் நன்மைகள், சிரிக்கும்போது வெளியே மின்னும் பற்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதை அம்மருத்துவ ஆய்வுகள் வாயிலாக அறியலாம்.

சிரிப்பின் பலன்கள்

* சிரிக்கும்போது, உடலுக்குள் போதுமான அளவில் ஆக்ஸிஜன் செல்கிறது. இதனால், உடல் ஆரோக்கியம் சிறந்தோங்கும்.

* தசைகளில் வலிகள் உண்டாகாமல் பார்த்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தையும் போக்குகிறது. தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கும் வகையில் செயல்பட, மூளைக்கு உறுதுணையாக இருக்கிறது.

* சமூகத்தோடு ஒன்றி, மகிழ்ச்சியுடன் வாழ வழிவகுக்கிறது. நகைச்சுவை உணர்வும், எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் நபர்களைச் சுற்றி, ஒரு கூட்டம் இருப்பதே இதற்குச் சான்று.

* உடல் சோர்வு ஏற்படாமல் தவிர்த்து, புத்துணர்வுடன் செயலாற்ற உதவுகிறது. எவ்வளவு கடினமான பணிகளை மேற்கொண்டாலும், புதிய உத்வேகம் கிடைக்கும் வண்ணம் தூண்டுதலை ஏற்படுத்துகிறது.

* இரத்த ஓட்டம் சீராக இருக்க துணைபுரிகிறது.

* இருதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருக்கவும் வகை செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இத்தகையை பலன்களைத் தரும் சிரிப்பினை, நாம் ஒரு நாளைக்கு 15 தடவைகளாவது உதிர்க்க வேண்டும். அதுவும் வாய்விட்டு, வயிறு குலுங்க சிரித்தால் மேலும் நன்மை பயக்கும்.

நாள்தோறும் சிரிப்பதெற்கென, பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன என்பதை கருத்தில்கொண்டு, சிரித்து வாழலாம்.


அதுக்காக வீதிகளிலை போகும்போதும் சிரிக்கதையுங்கோ. பிறகு தெரியும் தானே.........

நன்றி : நூலகம்

திராவிடப் பல்கலைக்கழகம்

திராவிட மொழிகள் உலகின் மிகப் பழமையான மொழிக் குடும்பங்களில் ஒன்றாகும். திராவிட மொழிகளாக 27 மொழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்று தற்காலம் வரை சிறப்பான வரலாற்றையும் பெருமையையும் உடையதாக உள்ளன. இம்மொழிகள் கால மாற்றங்களினால் தனித்தனியாக பிரிந்து, தனித்தனி வரலாற்றை உருவாக்கி கொண்டன. மேலும் திராவிட இனமாக ஒன்றுப்பட்டு இருந்த மக்கள் அனைவரும், மொழி சார்ந்து பிரிய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் திராவிட மொழிகளின் பொதுவான பண்புகள், சிறப்புகள் மற்றும் இவற்றிட்கு இடையே உள்ள தொடர்புகளை அறியவும், அதன் மூலம் உயர்வான பல இலக்குகளை அடையவும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. இந்த தேவையை நிறைவு செய்யவும் திராவிட மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்கு ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டதே "திராவிடப் பல்கலைக்கழகம்".

இப்பல்கலைக்கழகம் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு இணைப்புப் பாலம் போல் இருக்கின்ற "குப்பம்" என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் பேசும் மக்கள் இங்கு வசிப்பதால் இது "மும்மொழி சந்திப்பு" என்றே அழைக்கப்படுகிறது. இதனால் திராவிட பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது சிறப்பான பொருளை கொள்கிறது. 'திராவிடப் பல்கலைக்கழகம்' 1997-ம் ஆண்டு ஆந்திர அரசால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

திராவிடப் பல்கலைக்கழகம், எல்லா திராவிட மொழிகளுக்கும் உள்ள பொதுவான பண்பாட்டு, இலக்கிய மற்றும் வரலாற்று அடிப்படைகளை கண்டறிவது மற்றும் அதனை மேம்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம் திராவிட மொழிகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை உருவாக்குவதாகும். மொத்தம் 27 மொழிகள் திராவிட மொழிகளென அறியப்பட்டாலும் அவற்றில் நான்கு மொழிகள் மட்டுமே எழுத்துகளுடன் நிலைப்பெற்றுள்ளன. சரியான எழுத்து வடிவத்தை அடையாத, சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களால் பேசப்பட்ட மற்ற திராவிட மொழிகள் முழுமையாக வளர்ச்சியடையாமல் போய்விட்டன. இவ்வாறு சரியான எழுத்து வடிவம் பெறாமல் வளமையான பேச்சு வழமையை மட்டும் கொண்டுள்ள திராவிட மொழிகளுள் 'துளு' மொழியும் ஒன்று. பேச்சு வழக்கில் மட்டும் உள்ள மொழிகள் இத்தனைக் காலம் தாக்குப் பிடித்திருந்தாலும் அதனை பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்வகையில் வழக்கொழிந்து வரும் திராவிட மொழிகளை காக்கவும் மற்றும் வளர்ச்சியடைந்த திராவிட மொழிகளுக்கு இடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் வேண்டியது வரலாற்று அவசியமாகும். இத்தேவையை நிறைவு செய்யக்கூடிய விதமாக உருவாக்கப்பட்டுள்ளது திராவிடப் பல்கலைக்கழகம். இதற்கான செயல்களை செய்வது இன்றைய தலைமுறையின் மிகவும் முக்கியமான கடமையும் ஆகும். தற்போது 'துளு' மொழியில் கல்விப் பிரிவுகளை திராவிட பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

திராவிட பல்கலைக்கழகம் சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களால் பேசப்பட்ட மற்ற திராவிட மொழிகளின் வளர்ச்சிக்கு துணை செய்யும் வகையில் அம்மொழிகளில் கற்றல் கருவிகள், வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கி வருகிறது. கூடவே அந்தந்த மொழி சார்ந்த அடையாளங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு பலதரப்பட்ட முயற்சிகளால் திராவிட மொழிகளின் அடிப்படைகளிலும், திராவிட பண்பாட்டு கூறுகளிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு அதனை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் செயல்பட்டு வருகிறது திராவிட பல்கலைக்கழகம். திராவிட பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமாவது, திராவிடத்துவத்தின் உலகளாவிய பார்வை, உயர்கல்வி ஆக்கம் மற்றும் கிராம மற்றும் பின் தங்கிய மக்களின் முன்னேற்றம் ஆகியவை ஆகும்.

மேலும் திராவிட பல்கலைக்கழகம் உருவாக்கப் பட்டதன் பின்னணியில், தேசிய அளவில் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கமும் உள்ளது. இப்பல்கலைக்கழகம் சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து எளிதில் அடையக்கூடிய தொலைவில் உள்ளது. தற்போது இங்கு திராவிட "கலைகள் மற்றும் பண்பாடு - ஒப்பீடு, கல்வி மற்றும் மனித வள மேம்பாடு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், திராவிட இயற்கை மருத்துவம் மற்றும் இயற்கை முறை நோய் தீர்வு" ஆகிய தனித்தனி துறைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு துறையும் அதனுள் மேலும் சில பிரிவுகளை கொண்டிருக்கிறது. தவிர "பிராசரங்கா" என்ற பதிப்பு பிரிவும், "அனுஸ்ருஜான" என்ற மொழிப்பெயர்ப்பு பிரிவும் உள்ளன.

திராவிட மொழி சார்ந்த புத்தகங்கள், உரைகள், கட்டுரைகள் போன்றவற்றை நான்கு முக்கியமான திராவிட மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்படுகின்றன. மேலும் திராவிட சார்ந்த கல்வியை பிரபலமாக்க மற்ற இந்திய மொழிகளிலும் இவ்வகை வெளியீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மொழிமாற்றத் துறையை சார்ந்த வரை இப்பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய துறையாக உள்ளது. ஏனெனில் ஒருமைப்பாடு என்பது ஒவ்வொரு மொழியும் அதன் இலக்கிய மற்றும் எழுத்து வளத்தை மற்றொன்றோடு பரிமாறிக் கொள்வதில் அடங்கியிருக்கிறது. இவ்வகையில் ஒரு மொழியில் உள்ள வளங்கள் மற்ற திராவிட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் திராவிட மொழிகளுக்கு பொதுவான சொல்கள், திராவிட மொழிகளுக்கு பொதுவான அகராதிகள் போன்றவற்றை உருவாக்கும் முயற்சியிலும் திராவிட பல்கலைக்கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் பல ஆய்வுத் திட்டப் பணிகளும் வேகமாக நடைப்பெற்று வருகின்றன.

இவை தவிர படிக்கும் மாணவர்கள், ஆய்வு செய்யும் மாணவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விருதுகளையும், உதவித் தொகையையும், பரிசுத் தொகைகளையும் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகம் சிறப்பான வளர்ச்சியை அடைவது திராவிட மொழிகளுக்கும், ஒன்றுப்பட்ட திராவிட பாரம்பரியத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். திராவிட மொழிகளின் ஒருமைப்பாட்டையும் திராவிட பண்பாட்டின் ஒருமைப்பாட்டையும் ஒரே இடத்தில் கற்கவும், ஆய்வுகள் செய்யவும், மேம்படுத்தவும் ஆதாரமாக விளங்கும் திராவிடப் பல்கலைக்கழகம் விரைவாக அதன் இலக்குகளை அடையவும், மேலும் பலமடங்கு விரிவடையவும் வாழ்த்துவோம்.

இப்பல்கலைக் கழகத்தை பற்றிய மேலும் விவரங்களுக்கு http://www.dravidianuniversity.ac.in என்ற இணையத்தள முகவரியை காணவும்.

நன்றி : இணைய நூலகம்